Wednesday, 2 May 2012

மனிதன் என்ற சொல்

நடைபாதை ஓரத்தில் அண்டிக்கிடந்த
அந்த முதியவரின் மேல்
அப்பிக் கிடந்த அழுக்கில்
அழுக்கானது மனிதன் என்ற சொல்.

எவருமில்லை!!!

விசித்திர பார்வைகள் என் மேல் விழுகின்றன.
கேள்விக்குறிகளும் வீசப்படுகின்றன..
எந்த சலனமும் இல்லாமல்
தேடிக் கொண்டிருக்கிறேன்
எனது உணவைக் குப்பைத் தொட்டிகளில்.
ஏனெனில்,
உணவை வீசக் கூட
இந்த கூட்டத்தில்
எவருமில்லை.

கவிதை

கவிதைகளுக்குள் ஓர் உலகம் உண்டு;
கவிதைகளைத் தாண்டி இன்னோர் உலகம் உண்டு!

Tuesday, 1 May 2012

உன் சேலை அணைப்பினில்...

இந்த திருமண நாள்
உன் சேலையின்
அணைப்பினில் கழிகின்றது.
விவாதங்களுக்கு பின்
நான் பேசாமல்
இருந்த கணங்களை
சேமிக்க துடிக்கிறேன்
கூடுதலாய் சிலகணங்களை
உன்னுடன் வாழ்ந்திட.
என்றோ சேலை முந்தானையில்
ஒட்டிக் கொண்ட
மஞ்சள் கறையை
என் கண்ணீர் நனைத்ததடி.

சில கனவுகள்;சில நிஜங்கள்

கலைந்து போவதற்கென்றே சில கனவுகள்!
வலி கொடுப்பதற்கென்றே சில நிஜங்கள்.

அந்த ஒற்றை நாற்காலி


வீட்டு முற்றத்தில் அமர்ந்திருக்கும்
அந்த ஒற்றை நாற்காலி
எனக்கு போதிமரம்.
தனித்திருந்த நாட்களிலும்
சோகத்தின் பிடியில்
வெளுத்து போயிருந்த நாட்களிலும்
ஞானம் பெற்றேன் நான்
அதன் மேல் அமர்ந்த வண்ணம்.

பழைய டைரி!

பழைய டைரியில்
எழுத்துக்களில்லா பக்கம் ஒன்று.
உற்றுப் பார்த்தேன்
கண்ணீரின் கறை இருந்தது.
வார்த்தைகள் தோற்றுப் போன நாள் அது.