Saturday 22 September 2012

என் வீட்டு பால்கனியும் நட்சத்திரமும்

கூனிக் குறுகி கிடக்கும்
மனமே...
கலங்காதே....
கடந்து போன நொடிகள் போல
இந்த வினாடி சுமந்து இருக்கும்
இந்த சுமையை
எதிரே வரும் நிமிடங்கள்
அழைத்துப் போய் விடும்...
மனிதர் காயம் தருவர்...
காலம் மருந்து தரும்..
இன்று எனக்கு பிடித்தமானது...
என் வீட்டு பால்கனியும்...
நட்சத்திர வானமும்...
தூரமாய் இருந்தாலும்
என்றென்றும் துணையாய் உள்ளது...

Tuesday 4 September 2012

நான் ஒரு மனிதன்!





பேனா முனைதனில்
கண்ணீர் கசிய
பதிவு செய்து கொண்டிருக்கின்றேன்
மெழுகுவர்த்தியின் தியாகந்தனை!
உணர்ப்பூர்வமாய் நான் எழுத

உருகிக் கொண்டிருக்கின்றது
மெழுகுவர்த்தி ஒன்று பட்டப்பகலினில்!
ஏனெனில்,
நான் ஒரு மனிதன்!

Saturday 18 August 2012

அலட்சியங்களுக்குள் சிக்குண்டு கிடக்கும் சில கனவுகள்!

கண்ணோடு சில கனவுகள்..
கைக்கு எட்டா தூரம் என்றபோதும்
அனைவரின் மனதோடும்
நொடிக்கொரு முறை
எட்டிப் பார்க்கின்றன....
 
சில கனவுகள்.
வானவில்லின் வர்ணங்களைப்
பார்த்து விட ஏங்கும்
கண்பார்வையற்றோரின் கண்ணோடு
விழித்திருக்கும் கனவுகள்.
தன் மழலையின் மொழியினை
சில நொடியேனும் கேட்டு விடத்
துடிக்கும் தாயின் செவிகளில்
சத்தமாக ஒலித்துக் கொண்டே
இருக்கும் கனவொன்று!
தன் காதலிக்கும் பெண்ணின் காதோடு
"I Love You "
சொல்லி விட மருகும்
காதலனின் உதடுகளில்
உரைத்துக் கொண்டே இருக்கும்
காதல் கனவுகள் பல..
இப்படி நாம் அலட்சியப்படுத்தும்
நிஜங்கள் பல
சிலர் ஏங்கித் தவிக்கும்
வெறும் கானல் கனவுகள்!!

பிரிவு!

பிரிவின் காயம் கண்ணீர்துளிகளை
மட்டுமே பங்கு போட்டுக் கொள்கின்றது...
சிந்தி சிந்தி பின் களைத்துப் போய்
இல்லையென்றானதை இயலாமையோடு
ஏற்றுக் கொள்ளும் பொழுதினில்....
கண்ணீர்துளிகளைக் கசிந்து
காயத்தோடு மீண்டும்
இயல்புக்குத் திரும்பி விடுகின்றது
இந்த மனது!!!

Sunday 12 August 2012

கானல் நீர் தாகம் தீர்ப்பதில்லை!




திசை மாறிப்போன வாழ்க்கையில் உடைந்து சுக்கு நூறாகி கிடக்கும் இளம் பிராயத்து கனவுகளின் துகள்களை ஒட்டி வைத்துப் பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றோம் மனதின் ஒரு மூலையில். அவப்பொழுது விரிசல்களுக்கிடையில் கிடக்கும் கனவுகள் கீறி விடுகின்றன மனதையும் கண்ணீரையும். சாத்தியமான கனவுகள் கை நழுவி புதையுண்டு போகையில் கூடவே புதைந்து, மூச்சு கொஞ்சம் முட்டி, மீண்டும் உயிர் பிழைத்து எழுந்து விடுகிறோம். இருந்தும் சில பக்கவிளைவுகளுக்கு ஆளாகி விடுகின்றது பாழாய்ப் போன மனது!

இப்படி சில கல்லறையாகிப் போன கனவுகள் எனக்குள்ளும் உண்டு! என்னை மீட்டு எடுத்தது இரண்டு வாரங்களுக்கு முன் நிகழ்ந்த மிகச்சாதாரணமான வாகன நெரிசல் ஒன்று! வேலை முடிந்து வாகனத்தைக் கழுவ எடுத்துச் சென்றேன். கழுவி முடிக்கப்பட்ட நேரம் சரியாக மாலை மணி 6.10. நோன்பு துறக்கும் நேரம் என்பதால் வாகன நெரிசல் அதிகரித்திருந்தது! வாகனம் கழுவும் இடத்திலிருந்து நான் வசிக்கும் அப்பார்ட்மெண்டிற்குச் செல்ல இரண்டு வழிகள் இருக்கின்றன. நேர்பாதையில் 20 நிமிடங்களைச் செலவழித்த பின் இன்னொரு பாதையில் நுழைந்து சென்று விட எத்தனித்தேன். அந்த முடிவை நான் எடுக்கையில் மற்றொரு பாதையில் நிலவரம் நான் அறியேன். சட்டென முடிவெடுத்து அந்த பாதையில் நுழைந்து ஒரு 7கிலோ மீட்டர் சென்றிருப்பேன். அங்கே நான் கண்ட காட்சி, நீண்ட வரிசையில் வாகனங்கள் அசைவற்றுக் கிடந்தன! நானும் இணைந்து கொண்டேன். அங்கிருந்து நான் வசிக்கும் அப்பார்ட்மெண்ட்டிற்கு வெறும் 10 நிமிடங்கள்தான்! ஆனால், நான் குறைந்தது 1 மணி நேரம் 20 நிமிடங்கள் கழித்துதான் வீடு சென்றடைந்தேன்! இந்த பாதையைத் தேர்ந்தெடுக்காமல் நேர்பாதையிலேயே சென்றிருக்கலாம் என்று எப்பொழுதும் போல் என்னைத் திட்டிக் கொண்டேன்! ஒரு மணி நேரம் கழித்து எனது தோழி ஒருத்தி என்னைத் தொலைபேசியில் அழைத்தாள்.  நான் தவிர்த்த பாதையில் 2 மணி நேரம் காத்திருந்து அப்பொழுதுதான் வீடு வந்து சேர்ந்ததாகச் சொன்னாள். அந்த பாதையில் சிறு விபத்து ஒன்று நடந்ததால் வாகன நெரிசல் மோசமடைந்ததாக அவள் கூறினாள்!! மெளனம் என்னை ஆக்ரமித்தது! சில உண்மைகள் மெல்ல உரைத்தது!

நாம் கடந்து வந்த பாதைகளைப் பற்றி நமக்குத் தெரியும்!! செல்லாத பாதைகள் சுமந்து நிற்கும் சுமைகளை நம்மால் எப்படி யூகிக்க முடியும்? ஒரு வேளை அந்த பாதையில் நாம் சென்றிருந்தால் நாம் வருத்தப்பட்டிருக்கக்கூடும்! நிறைவேறாமல் போன ஆசைகளும் கனவுகளும் அப்படித்தான். நம்முடைய ஆசைகள் நிறைவேறுகையில் அவை நாம் விரும்பிய ஆசைகளாகத்தான் இருந்திருக்கும் என்பதை யார் உறுதி செய்ய முடியும்? நாம் கடந்து வந்திருக்கும் பாதை மட்டுமே நிதர்சனம்! மருத்துவராக வேண்டும் என ஆசை கொண்டு கடினப்பட்டு படித்து மருத்துவராகிய பின் அதன் சுமைகளைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட ஒரு மருத்துவரைப் பற்றி கேள்வி பட்டிருக்கின்றேன்! அன்றைய ஆசை இன்றைய சுமை அவருக்கு!

விதியில் நம்பிக்கை இல்லை எனக்கு! ஆனால், நிகழும் சம்பவங்களில் நம்பிக்கை உண்டு! நாம் கடந்து வந்திருக்கும் பாதை மட்டுமே நிதர்சனம்! அதன் வலியும் வரமும் நாம் உணர்ந்த ஒன்று! நிராசையான ஆசைகள் வெறும் நிழல்கள் மட்டுமே! நிஜங்களோடு வாழ்வோம் நிழல்களில் இளைப்பாறி மட்டும் கொள்வோம்!

ஏனெனில், கானல் நீர் தாகம் தீர்ப்பதில்லை!



Wednesday 1 August 2012

நடுங்கிடும் விரல்கள் கொடுக்கும் தினம் ஒரு கொட்டு!

அந்த பெரியவருக்கு வயது குறைந்தது 65 இருக்கும். நான் வசிக்கும் அப்பார்மெண்ட் சாலையைப் பெருக்குபவர். நான் வேலைக்குச் செல்லும் வேளையில் தவறாமல் அவரைப் பார்ப்பேன். மெலிந்த உடல். கனிவான முகம். என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் ஒரு மெல்லிய புன்னகை உதிப்பார்.

காலை நேர சோம்பல் அன்றைய பொழுதைச் சலிப்படைய செய்யும் பொழுதெல்லாம் ஓங்கி தலையில் அடித்தது போல் இருக்கும்- அந்த பெரியவர் நேர்த்தியாய் சாலையைப் பெருக்கும் காட்சி :-)

வாழ்க்கை தினமும் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்க வாழ்ந்திட :-)
 

அந்த கைப்பிடிக்குள்...


அவருக்குக் கண்பார்வை இல்லை. வீடு திரும்பும் வேளைகளில் அவரை அடிக்கடி பார்ப்பேன். முடிந்த மட்டிலும் அவருக்கு உதவி செய்வேன். ஒரு நாள் பிரச்சனை ஒன்றின் இடுக்கினில் சிக்குண்டு எனது தன்னம்பிக்கையை இழந்து கொண்டிருந்த தருணத்தில் அவரைக் கண்டேன். கைப்பிடியுடன் தடுமாற்றமில்லாமல் அவர் தனது பாதைதனில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரிடம் ஓடிச் சென்று அவரின் கையைப் பிடித்து அவரை அழைத்துச் சென்றேன். அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். அவர் தான் தினமும் கோலாலம்பூரிலிருந்து ஷா அலாமிற்குப் பேருந்தில் பயணம் செய்து வேலைக்குப் போவதாகச் சொன்னார். அதிர்ச்சிக்குள்ளானேன்.

அவருடன் நான் செலவழித்தது வெறும் 6-7 நிமிடங்கள் மட்டுமே! அந்த நிமிடங்கள் எனக்கு அளித்த தைரியத்தை எந்த தன்முனைப்புச் சொற்ப்பொழிவாலும் தந்திருக்க முடியாது! பாதை கடக்க முயற்சிக்கையில் அருகில் உள்ளவரின் கையைப் பிடித்து கடக்கும் பொழுதினில் ஏற்படும் தைரியமும் தன்னம்பிக்கையும் ஏற்பட்டது எனக்கு அவரின் கைப்பிடியில்! யார் சொன்னது? விழிகளில் பார்வை உண்டென்று. அது மனதின் உறுதியில் இருக்கு. அன்று பாதையைக் கடக்க உதவியது நானல்ல. அவர்தான்!
 
மாற்றுத்திறனாளிகளைப் பார்த்துப் பரிதாபப்படும் அளவிற்கு நாம் முழுமையடைந்திருக்கவில்லை என்பது புரிந்தது எனக்கு!

எனது டைரி இன்று எனக்கு போதி மரம்!



அலுவலக கோப்பு ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கையில் எனது பழைய டைரிகள் மூன்று கண்ணில் தென்பட்டது. கடந்த காலத்தை அசைபோடுவதில் எப்பொழுதுமே ஓர் அலாதி இன்பம்தான். தேடிக்கொண்டிருந்த கோப்பை மறந்து விட்டு டைரியில் மூழ்கினேன். எனக்குக் கிடைத்த அடிமை உண்மையிலேயே மிகவும் திறமைசாலிதான். அது வேறு யாரும் இல்லை. என் செல்லக்குட்டி விநாயகன் தான். ஏனெனில், அவனைத் திட்டியோ அல்லது அவனுக்கு நன்றி சொல்லியோ தான் தொடங்கி இருக்கின்றேன் ஒவ்வொரு பதிவையும் ;-)

என்னுடைய மிகப்பெரிய பலவீனம் என்னவென்றால் என்னால் எனது உணர்வுகளை வாய்மொழி வார்த்தையாய் கூற இயலாது. எழுதுகையில் என்னை அறியாமல் ஆத்மார்த்தமாய் எழுதி விடுவேன். எனது உணர்வின் ஆழம் உணர வேண்டுமென்றால் ஒன்று நான் எழுதுவதைப் படிக்க வேண்டும்; இல்லையேல் எனது கண்ணீரை அல்லது மெளனத்தை மொழிபெயர்த்துக் கொள்ள் வேண்டும்!

உணர்வுகளின் சுழற்சியில் வார்த்தைகள் அழுத்தமாகவே பதிந்திருந்தன. சில கண்ணீர்துளிகளின் ஈரம் இன்னும் எனது எழுத்துக்களில் ஒட்டிக் கொண்டிருந்தது! இன்பத்தின் ஆழத்திற்குள் சில சொற்கள் இன்னும் இளைப்பாறிக் கொண்டிருக்கின்றன. அன்றைய நிலையில் என் வாழ்வின் மிகக் கொடூரமான நிமிடங்கள் என்று நான் கருதிய நிகழ்வுகள் இதோ, இன்று வெறும் நினைவுகளாய் மட்டும் கிடக்கின்றன சில பக்கங்களில்! மீண்டு வந்துதான் விட்டேன் நான்! மீள முடியா காயம் என்று எதுவுமில்லை. நம் வரம்புக்கு மீறிய பிரச்சனைகளும் எதுவுமில்லை! நேற்று என்பதே வெறும் நினைவாகும்பொழுது அதன் காயங்கள் மட்டும் காய்ந்து விடாதா என்ன? டைரியை மூடுகையில் கொஞ்சம் உரைத்தது எனக்கு! கடந்த காலத்தின் பக்கம் நாம் திறவாமல் திறக்காது என்பது!!

எனது டைரி இன்று எனக்கு போதி மரம்!

நினைவுகள் என்பது...



இந்த மனித வாழ்வின் மிச்சம் வெறும் நினைவுகள் மட்டுமே! எலும்புக்கூடாகி கிடக்கும் மனிதர் ஒருவர் வாழ்வது நினைவுகளில் மட்டுமே. இந்த நினைவுகளுக்குத்தான் எவ்வளவு வலிமை? வதைக்கவும் செய்கின்றது; நம்மை வாழவும் வைக்கின்றது. நினைவுகள் என்பதுதான் என்ன? மகிழ்ந்து திளைத்திருக்கையில் உள்ளந்தனில் பெருக்கெடுத்து ஓடும் இன்பம்தான் நினைவுகளோ? எனது பார்வையில் நினைவுகள் கண்ணீரின் ஈரத்தில் கூட எழுதப்படலாம். கரைதனை தொட்டு...
தொட்டுச் செல்லும் கடல் அலைகளின் ஈரத்தில் நனைந்திருக்கின்றது கரையின் அழகிய நினைவுகள்! ஆத்மார்த்தமான உணர்வில் உண்மையான அன்பில் நகரும் ஒவ்வொரு நொடியும் நம் இதயக்கூட்டில் சேமிக்கப்படும் நினைவுகளே. தாயிடம் அடி வாங்கி அழுத கணங்கள் இன்று நாம் நினைத்து மகிழ்ந்திடும் நினைவுகளாய் இல்லையா? அன்றைய கண்ணீர்துளிகளின் ஈரத்தில் நிறைந்திருக்கின்றது இன்றைய அழகிய நினைவுகள்!

நினைவுகள் என்பது இன்பத்தின் எல்லையில் சேகரிக்கப்படுவது அல்ல. மனதின் ஆழ்நிலை உணர்வில் கோர்க்கப்படுவது!

நாய்க்குட்டி போதும்!

புதைகுழியின் கடைசி அடிக்கு நாம் விழுந்து கொண்டிருக்கையில், உதவிக்கு நீட்டப்படும் கைகள் அனைத்தும் நம்மை மீட்டு விடுவதில்லை. ஏனோ ஒரு சிலரால் மட்டுமே நம்பிக்கை கொடுக்க முடிகின்றது காயம் பட்ட மனதிற்கு! எல்லோர் வாழ்விலும் அந்த தற்கொலை நிமிடங்கள் இருக்கத்தான் செய்கின்றது, குறைந்தபட்சம் மனதளவில்!! வாழ்ந்து விடுவது சிரமமில்லை; ஆனால், விழுந்ததும் எழுவதில்தான் கொஞ்சம் உறுதியும் மனோதிடமும் தேவைப்படுகின்றது!

கடந்து வந்த பாதையில் என்னுடன் நடந்து வந்த கதைமாந்தர்கள் நிறையவே இருக்கின்றனர். என்னுடன் பயணம் முடிந்து பாதை விலகி சென்றவர்கள் ஆயிரமாயிரம். சில தூர அடிகளில் தங்களின் சுவடுகளை அழுந்த பதித்தவர்களும் உண்டு! பல நூறு மையில் கடந்த போதும் நினைவை விட்டுத் தவறிப் போன காலடித்தடங்களும் உண்டு. மனிதர்கள் தவறிப்போன நினைவுத்தடங்களை வீட்டில் வாழ்ந்த செல்லப்பிராணிகள் நிரப்பி இருப்பது வியக்கத்தக்கது! தனது பசி தீர்த்த ஒரு ரொட்டித்துண்டிற்காக வாழ்நாள் முழுதும் நன்றி மறவா நாய்க்குட்டிகளுக்கு மத்தியில் தாழ்ந்து போன மனிதரும் உண்டு என் வாழ்வின் வரலாற்று பதிவுகளில்!! வரலாறு முக்கியம்தான். உலகின் வரலாறு அல்ல; தனித்திருக்கையில் நாம் திரும்பிப் பார்க்கும் நமது வரலாறு கற்றுக் கொடுக்கும் வாழ்வின் நிதர்சனத்தை!


இன்று நான் கற்றுக் கொண்ட நிதர்சனம்: துவண்டு கிடக்கும் மனதை மீட்க சில சமயங்களில் நமது காலடியைத் தொட்டவண்ணம் அமர்ந்திருக்கும் நாய்க்குட்டி போதும்!

Thursday 5 July 2012

வாழ்க்கை ஒரு மெதுநடை.





இன்று,
வாழ்க்கை என்பது
விரைவுப் பேருந்து பயணம்.
விழிமூடி திறப்பதற்குள்
செலவழிந்து போகும்
பல மணி நேரம்...

நாளை என்ற கனவிற்காக
நரபலிகொடுக்கப்படும்
நிஜமான நிகழ்காலம்..
இந்த வாழ்க்கையின் பயணம்
முடிவுறும் இடம் நம் மரணம்....

அப்படியெனில்,
வாழ்க்கை என்பது என்ன?
"வாழ்க்கை"
ஓர் அழகான பயணம்..
இந்த பயணத்தின் குறிக்கோள்
சென்றடையும் இடம் அல்ல...
பயணிக்கும் ஒவ்வொரு நொடிதான்
இந்த வாழ்க்கையின் தத்துவம்...

ரசித்து நிதானமாய்
கடக்கும் வினாடிகள் இதயத்தை
வாழ வைக்கும்
சுகமான நினைவுகள்..

வாழ்க்கை ஒரு தென்றல்..
விழி மூடி அனுபவியுங்கள்..

வாழ்க்கை ஒரு பூங்கா
மகிழ்ச்சியுடன் நுகருங்கள்..

வாழ்க்கை ஒரு கவிதை
இன்றாவது ரசித்து படியுங்கள்...

வாழ்க்கை என்பது
ஒரு மெதுநடை..

காலாற நடந்து
காட்சிகளை ரசித்து
இளகிய இதயத்தோடு
நிறைவான நினைவுகளைச்
சுமந்து செல்வோம் நாமும்
ஒரு மெதுநடை..

அன்புடன்,
கோகிலா கன்னியப்பன்.

Sunday 24 June 2012

விதிவிலக்கு

தினம் ஒரு காயம்..
அதில் புன்னகை விதிவிலக்கு...
தினம் தாங்கொண்ணா பசி..
அதில் உணவென்பது ஒரு விதிவிலக்கு..
தினம் துளி துளியாய் போகும் உயிர்..
அதில் வாழ்வென்பது விதிவிலக்கு...
இவ்வகை வாழ்வுண்டு மனிதர் பலருக்கு..
அதில் நாம் விதிவிலக்கு...

Tuesday 12 June 2012

நான் மனிதன் அல்ல;ஈழத்தமிழ்ப் பெண்

மண் தன் மடி மேல்
தாங்கி நிற்கும் என்னைப்
பரந்து விரிந்த வானம்
அணைத்துக் கொள்கிறது
தன் நீல நிற போர்வையில்....
... ஏனெனில்,
நிர்வாணமாய்க் கிடக்கிறேன்
நான் பூமிப் பந்தில்!!
மெல்ல ஒழுகிக் கொண்டிருக்கிறது
உதிரங்களினூடே எனதுயிர்!!!
மண் முழுதும் சிதறிக் கிடக்கு
எனது பெண்மை!
பூப்பெய்த கணமும்
கற்பிழந்த நொடியும்
நினைவில் இல்லை எனக்கு!
ஏனெனில்,
வெறி பிடித்த மிருகங்கள்
குதறிப் போட்ட மிச்சம்
நான்!!
வலி என்ற சொல்- இன்று
என்னுள் வலிமையற்றதாகி விட்டது!!
காலடித்தடங்களும் எள்ளி நகையாடும்
குரல்களும் கேட்கின்றது!!
பெண்ணென்றால் அணைத்து
மோகத்தினைத் தீர்த்துக் கொண்டிருப்பர்!
ஈழத்துதமிழ் பெண்ணென்பதால்
என்னைக் கிழித்துத்
தன் வெறியைத் தீர்த்துக் கொண்டனர்.
வழிந்து கிடக்கும் என் கற்பினை
மிதித்துக் களிக்கின்றனர்.
மரணம் கூட என்னை
அணு அணுவாய் ரசித்துக்
கொல்கிறது!!!
விழி நீர் ஒன்று கசிகின்றது
ஈழத்தமிழரின் நிலைக் கண்டு!
உடைகளற்ற நிராயுதபாணியாய் நிற்கும்
என்னைப் பார்த்துத் தூரத்தில்
நாய் ஒன்று ஓலமிடுகின்றது!!
நான் மனிதன் அல்ல
ஈழத்தமிழ்ப் பெண்!!
"

ஒரு புன்னகை..

சின்னதாய் ஒரு புன்னகை
உன் இதழோரம் பூக்கையில்
ஓராயிரம் அர்த்தங்கள்
என் மனம் படிக்கின்றது.
எனக்கான புன்னகை என்றும்
என்னால் தோன்றியது என்றும்
என் நினைவில் மலர்ந்தது என்றும்
கற்பனை செய்து கொள்ளும்
இதயம் இறுதி வரை
புரிந்து கொள்ளவே இல்லை!
உன் புன்னகையின் முற்றுப்புள்ளியில் கூட
இவள் காதலின் சொட்டுத்துளி
இல்லை என்று!!
"

மீண்டும் ஒரு முறை

மீண்டும் ஒரு முறை...
அந்த இளவேனிற்காலம்
வேண்டும் மீண்டும் ஒரு முறை....
தரையை மறந்து
சிறகுக் கட்டி வானில் பறந்த
அந்த பருவம்
வேண்டும் எனக்கு
மீண்டும் ஒரு முறை...
கடந்த காலமும்
மரணமும் ஒன்றென்று
உணர்ந்த பின்னும்
ஏங்கும் இந்த மனம்
உண்மையாய் வாழத் துடிக்கிறது
மீண்டும் ஒரு முறை...

Tuesday 22 May 2012

எனது கவிதை..

எனது கவிதை
யாரோ ஒருவருக்குப் பிடித்து விடுகின்றது.
எங்கோ எவரையோ குழப்பி விடுகின்றது..
ஏனோ சிலருக்கு எரிச்சலூட்டுகின்றது..
பலரால் அலட்சியப்படுத்தப்படுகின்றது..
மறுக்கப்பட்டிருக்கு வெறுக்கப்பட்டிருக்கு
எது எப்படி இருப்பினும்
எனது கவிதை
தன் தன்மை இழக்காமல்
வாழ்கின்றது
என்னைப் போன்றே :-)

Sunday 13 May 2012

மழலையின் புன்னகை போதும்!!

எதுகை மோனை வேண்டாம்;
என் உணர்வைச் சொல்ல
சில வார்த்தைகள் போதும்.
இலக்கணங்கள் வேண்டாம்;
என் மெளனத்தை விளக்கும்
மொழி ஒன்று போதும்.
நயம் மிகுந்த கவிதைகள் வேண்டாம்;
என் கண்ணீரை மொழிபெயர்க்கும்
சொற்கள் போதும்!!!
இது எதுவும் சாத்தியம் இல்லை எனில்
எனக்கு மழலையின் புன்னகை போதும்!

Thursday 10 May 2012

மன்னிக்க வேண்டும் மகாகவி!!

"ஜாதிகள் இல்லையடி பாப்பா"
மன்னிக்க வேண்டும் மகாகவி!!
உங்களின் இந்த விதிக்கு
விலக்கு உண்டு!!
கீழ்ஜாதி என்ற ஒன்று
உண்டு இப்புவிதனில்!!

சின்னஞ்சிரு கிளி அவள்
சித்திரப் பதுமை சிலை!!
பிரபஞ்சம் சுருங்கி போகும்
அவள் பிஞ்சு விரல்தனில்!!
இரண்டொரு பற்கள் என்றாலும்
அவள் சிரிக்கையில்
இதயம் நிறைந்து போகும்!!
2 வயது பெண்தேவதை அவள்!!

நான் கண்டது அவளை
ஓர் அன்பு இல்லத்தில்!!
நேர்முகமாய் காண இயலவில்லை
அவளால்!!!
தலை சாய்த்து கண்சிமிட்டி
கொஞ்சும் புன்னகையில்
வலம் வர வேண்டிய தேவதை
தலை சாய்ந்த படியே
கழிக்க வேண்டும் தன் வாழ்நாளை!
தலையிலிருந்து கன்னம் வரை
நீண்டு வடு ஒன்று!!
காயத்தின் காரணம் கேட்டேன்!
ஒரு நொடியில் உயிரை இழந்தேன்!!

இரவு நேர பசிக்கு
குழந்தை அவள்
அழுத காரணத்திற்காக
சுவற்றில் எறியப்பட்டாள்!
எறியப்பட்ட கணம் எப்படி
துடித்திருப்பாளோ இறைவா!!
எறிந்தவன் எவனுமில்லை
தந்தை என்ற முகமூடிக்குள்
ஒரு ராட்ஷசன்!!!

அவன் தீண்டதகாதவன்!!!
அவன் ஒரு கீழ்ஜாதி மனிதன்!!!
மிருகமென ஒப்பிட்டு
மிருக இனத்தைக் ஈனப்படுத்தாதீர்!!
பூவொன்றை சிதைத்த
அவனைக் கொசுக் கூட அண்டாது!
ஏனெனில்,
அவன் உதிரம் தீண்டதகாதது!!
எனவே,
மன்னிக்க வேண்டும் மகாகவி!!
கீழ்ஜாதி என்ற ஒன்று
உண்டு இப்புவிதனில்!!
"இது கற்பனையல்ல நிஜம்!!!"

Friday 4 May 2012

வெண்ணிலவு!!

வெள்ளை வான்முகில்களுக்கு
மத்தியில் அழகாய் காட்சியளிக்கிறது
வெண்ணிலவு!!
இன்று
நிறைய கவிதையும் காதலும் பிறந்திருக்கலாம்

இரவு!

இரவு கவிதைக்குள் ஓர் ஓவியம்;
ஓவியத்திற்குள் ஒரு கவிதை...
தினந்தோறும் ரசித்த போதும்
திகட்டவில்லை; சலித்துப் போகவும் இல்லை.
இரவு நேரத்தில்
பிடித்த பாடல்களைக் கேட்கையில்
இன்னும் பிடித்துப் போகிறது
அந்த நிலவும் இந்த இரவும்...

ஒற்றை வெண்ணிலவு!

மொத்த பகலையும்
வென்று விடுகிறதே
இந்த ஒற்றை வெண்ணிலவு!

நிலா, நட்சத்திர இரவு!

இரவில் தூங்க வேண்டும்
என நியதியைப் படைத்தவன்
நிலவையும் கண்சிமிட்டும் நட்சத்திரங்களையும்
பாராமல் இருந்திருப்பான்!

கற்புக்கரசி...


அடர்ந்த இருள் முற்றிலும்
சூழ்ந்திருந்த போதும்
தன் ஓளியால் இருட்டினை
நெருங்க விடாமல்
கற்பு காக்கும் வெண்ணிலவே!
 உன்னில் கறையைக்
கண்டுபிடித்தவன் யார்?
அவன் ராமன் வம்சத்தைச்
சேர்ந்தவனாய் இருப்பான்!

Wednesday 2 May 2012

நிறுத்திக் கொள்!

தேங்கி கிடக்கும்
உன் நினைவுகளில்
நான் மூழ்கி
மூச்சடைத்துப் போகும் முன்
நினைவுகள் தருவதை நிறுத்திக் கொள்!

உடைக்க முயலாதீர்கள்!!

சில மெளனங்களை உடைக்க முயலாதீர்கள்.
ஏனெனில்,
உடைந்து வெளிவரும்
வார்த்தைகளின் வலிமையைத்
தாங்க இயலாமல் போகலாம்.

மனிதன் என்ற சொல்

நடைபாதை ஓரத்தில் அண்டிக்கிடந்த
அந்த முதியவரின் மேல்
அப்பிக் கிடந்த அழுக்கில்
அழுக்கானது மனிதன் என்ற சொல்.

எவருமில்லை!!!

விசித்திர பார்வைகள் என் மேல் விழுகின்றன.
கேள்விக்குறிகளும் வீசப்படுகின்றன..
எந்த சலனமும் இல்லாமல்
தேடிக் கொண்டிருக்கிறேன்
எனது உணவைக் குப்பைத் தொட்டிகளில்.
ஏனெனில்,
உணவை வீசக் கூட
இந்த கூட்டத்தில்
எவருமில்லை.

கவிதை

கவிதைகளுக்குள் ஓர் உலகம் உண்டு;
கவிதைகளைத் தாண்டி இன்னோர் உலகம் உண்டு!

Tuesday 1 May 2012

உன் சேலை அணைப்பினில்...

இந்த திருமண நாள்
உன் சேலையின்
அணைப்பினில் கழிகின்றது.
விவாதங்களுக்கு பின்
நான் பேசாமல்
இருந்த கணங்களை
சேமிக்க துடிக்கிறேன்
கூடுதலாய் சிலகணங்களை
உன்னுடன் வாழ்ந்திட.
என்றோ சேலை முந்தானையில்
ஒட்டிக் கொண்ட
மஞ்சள் கறையை
என் கண்ணீர் நனைத்ததடி.

சில கனவுகள்;சில நிஜங்கள்

கலைந்து போவதற்கென்றே சில கனவுகள்!
வலி கொடுப்பதற்கென்றே சில நிஜங்கள்.

அந்த ஒற்றை நாற்காலி


வீட்டு முற்றத்தில் அமர்ந்திருக்கும்
அந்த ஒற்றை நாற்காலி
எனக்கு போதிமரம்.
தனித்திருந்த நாட்களிலும்
சோகத்தின் பிடியில்
வெளுத்து போயிருந்த நாட்களிலும்
ஞானம் பெற்றேன் நான்
அதன் மேல் அமர்ந்த வண்ணம்.

பழைய டைரி!

பழைய டைரியில்
எழுத்துக்களில்லா பக்கம் ஒன்று.
உற்றுப் பார்த்தேன்
கண்ணீரின் கறை இருந்தது.
வார்த்தைகள் தோற்றுப் போன நாள் அது.


Tuesday 10 April 2012

ஒற்றை வயிறு எனக்கு!

ஒற்றை வயிறு எனக்கு
உன்னைப் போல்!!
ஆனால்,
வற்றிக் கிடக்கு என் எலும்போடு!!!
கரிமலவாயு உண்டோ
என் உடம்பில்?
கேட்டுக் கொண்டதுண்டு
நானே என்னிடம்!!
ஏனெனில்,
மூக்கினூடே நுழையும்
பிராண வாயு
வயிற்றுக்கு செல்லும்
பாதை மூடிக் கிடப்பதைக் கண்டு
வெளியேறி விடுமோ?
மனிதன் என்ற பெயரன்றி
வேறெதுவும் எனக்கில்லை!!
எனக்கான உணவையும் சேர்த்தே
உண்டு விடுகிறார்கள் யாரோ
இப்புவிதனில்!!
விரயமாகும் ஒவ்வொரு
சோற்றுப்பருக்கையிலும் என் பெயர்
எழுதி அழிக்கப்பட்டு விட்டது!!!

Friday 6 April 2012

காதல்

வார்த்தைகளில் அடங்கி விடாது
என் காதல்.
அடங்கி விடும் எனில்
வானத்தின் எல்லை
மூன்றெழுத்தில் முடிந்து விடும்!

ஒரு மரணத்தோடு...

ஒரு மரணத்தோடு மரணிக்கின்றது,
கேட்கப்படாமல் போன மன்னிப்பும்
சொல்லப்படாமல் போன காதலும்!

ஒற்றைப் புள்ளி...

ஒரு புள்ளியில் தொடங்கும் உறவு
சில சமயங்களில் வேறொரு புள்ளியில்
முடிந்து விடுகின்றது.
புள்ளியின் நீளத்திற்குள்
உறவின் ஆழம்.

ஏதோ ஒரு....

ஏதோ ஒரு பாடலில் நம் வாழ்க்கை
அடங்கி விடுகின்றது;
ஏதோ ஒரு கவிதையில்
நம் மனம் புரிந்து விடுகின்றது:-)

பதிலான கேள்வி!!

கேள்வியுடனே எழுந்து
கேள்வியுடனே உறங்கிடும்
இந்த வாழ்க்கையின் பதில்
கேள்வியிலேயே முடிந்து விடுகின்றது!

குங்குமம்

குங்கும பொட்டில் வழிகின்றது
விதவை ஒருத்தியின் ரத்தக் கண்ணீர்!

Monday 2 April 2012


ஐந்தறிவு என்பதால்
புரிந்து விட்டதோ அஃறிணைகளுக்கு
 "ஜாதிகள் இல்லை" என்ற தத்துவம்?

Wednesday 21 March 2012

தினம் ஒரு விடியல் என் வானிலே!

           என் வாழ்வில் தவறாமல் நிகழும் ஒரு சம்பவம் விடியல். உறக்கம் கலைந்து என் விழிகளைத் திறந்தவுடன் விடிந்து விடுகிறது என் வானம். ஒவ்வொரு விடியலும் வெவ்வேறான மனோபாவங்களுடனே விடிகின்றது! ஆசைகளும் எதிர்ப்பார்ப்புக்களும் தழும்ப, கனவினை மறுத்து ஏங்கி தவித்த விடியல்கள் உண்டு.. சுமையான நிஜங்களைத் தூர எறிந்து விட்டு கனவுகளில் ஒளிந்து கொண்ட விழிகள் ஏற்க மறுத்த விடியல்களும் உண்டு! கண்களில் ஓரம் ஒட்டிக் கொண்டிருந்த உறங்கங்களில் விடிந்தும் விடியாத விடியல்கள் உண்டு. எந்த வகை விடியல் என்றாலும் தவறாமல் என் வாழ்வில் நிகழும் ஒரு சம்பவம் விடியல்.

Friday 2 March 2012

மெல்லிய கயிறு.

சில நிதர்சனமான உண்மைகள்
கொடுக்கும் வலிகளின் தன்மையை
விவரிக்க முடியும் எனில்
கண்ணீர் துளிகள் படைக்கப்படாமல்
இருந்திருக்கக் கூடுமோ?
சப்த நாடியும் ஒடுங்கி
அமர்ந்திருக்கும் வேளையில்
வெறித்து பார்க்கும் விழிகளைச்
சில சமயம் கண்ணீர் கூட
நனைத்திட மறுத்து விடுகின்றதே?
யோசனையே இல்லாமல்
யோசித்துக் கொண்டிருக்கும் கணங்கள்
கனத்து நிற்பது
அந்த இதயம் மட்டுந்தானே அறியும்!!
தோல்வி, மரணம், துரோகம், ஏமாற்றம்
இப்படி இடிந்து விழுகையில்
இதயம் நொறுங்கினாலும்
உள்ளத்தின் ஏதோ ஒரு மூலையில்
தொங்கி கொண்டே இருக்கின்றது
ஒரு மெல்லிய கயிறு.
புதையாமல் நாம்
அதை பிடித்துக் கொண்டே
மேலேறி விடுகின்றோம்!!

Thursday 23 February 2012

வினாடிகளின் விலாசங்கள்

                எழுத்துக்களைத் தாங்கும் நோட்டுப்புத்தகங்களுக்குப் புரியும் அந்த கீறல்களின் வலி. வலி மிகுந்த அனுபவங்கள் கற்றுக் கொடுத்த பாடங்கள் மிகவும் வலியது!! எத்தனை மரணங்கள் அடைந்து மீண்டும் ஜனனங்கள் எடுத்திருப்பேன்? அந்த ஒவ்வொரு ஜனனங்களில்தான் எத்தனை எத்தனை மரண வலிகள்!! கடந்து வந்த பாதைகள் நாம் பயணிக்கும் பாதைகளைச் செம்மைப்படுத்திட வேண்டும். தூரத்தில் காத்திருக்கும் பாதையின் நீளம் எவரும் அறியார்.

               முட்கள் தைக்கும் பாதைகளில் ஆங்காங்கே சில பூக்களும் தூவப் பட்டிருக்கும் என்பதை அவப்பொழுது நான் உணர்ந்திருக்கிறேன். விழுந்து பின் முட்டி மோதி எழுகையில்தான் மனித வாழ்வின் மகத்துவம் அடங்கியுள்ளது என்று நம்புகின்றேன். சில சமயங்களில் தோற்பதன் மூலம்தான் வெற்றி அடைய முடியும் என்பதையும் உணர்ந்திருக்கிறேன். சில வெற்றிகளில் தோல்வியும் அடைந்திருக்கிறேன். எது எப்படி இருப்பினும் நான் நானாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் நானாகவே இருக்கவும் விரும்புகிறேன். என் இறந்த காலம் இறந்த பின்னும் நினைவுகளாய் எனக்கு மிகச் சிறந்த பாடங்களாய் என்னுடன் பயணிக்கின்றது. எதிரே காத்திருக்கும் என் எதிர்காலம் விடுகதையாய் வெறும் கனவுகளின் பிம்பங்களாய் என்னுடன் நிழலாடிக் கொண்டிருக்கிறது. என் இதயத்துடன் துடிக்கும் இந்நொடியோ என்னை வாழ அழைக்கின்றது. நினைவுகளையும் கனவுகளையும் சுமந்து கொண்டே கழிகின்றது என்னைச் சலிக்காமல் சுமக்கும் நிஜமான இவ்வினாடி...


அன்புடன்,
கோகிலா கன்னியப்பன்.

Saturday 18 February 2012

சில மெளனங்கள் வார்த்தைகளாய்!!

நாகரீகம் பார்த்து கூறாமல்
விட்டுப் போன வார்த்தைகள்
அவப்பொழுது கொடுக்கின்றன
சாட்டை அடிகள்..
ஏனென்று தெரியாமல்
என்னவென்று புரியாமல்
புழுங்கி துடித்து
பின்னொரு நாள்
எதுவும் நமக்கு சாதகமானது இல்லை
என்றான பின்,
கண்ணீர் சொரிந்து
காலம் இழுத்துச் செல்ல
அவப்பொழுது ஏக்கமாய்
திரும்பி பார்த்து
மீண்டும் பயணித்த போதும்
நாகரீகம் பார்த்து கூறாமல்
விட்டுப் போன வார்த்தைகள்
அவப்பொழுது கொடுக்கின்றன
சாட்டை அடிகள்..
சில மெளனங்களை
நிரப்பி இருந்தால்??

மீண்டும் அந்த பாடல் ஒலிக்கையில்...

சில பாடல்களில் தொலைவது
நம் மனம் மட்டுமல்ல
சில காயங்ளும்தான்.
சில பாடல்களில் விழிப்பது
நினைவுகள் மட்டுமல்ல
சில வலிகளும்தான்..

அந்த சில வார்த்தைகள்!

ஒரு கணமேனும்
அல்லது ஒரு நொடியேனும்
நாம் வார்த்தைகளைத்
தேடி தோல்வியுற்றதுண்டு!
தன் காதலின் ஆழத்தை
உணர்த்த முற்படுகையில்..
காயத்தின் வலியை
விளக்க முயலுகையில்..
வழியும் கண்ணீரின் காரணத்தைச்
சொல்ல விரும்புகையில்..
பிரிவின் துயரத்தைக்
கூற நினைக்கையில்..
இப்படி
ஒரு கணமேனும்
அல்லது ஒரு நொடியேனும்
நாம் வார்த்தைகளைத்
தேடி தோல்வியுற்றதுண்டு!

ஜன்னலின் வழியே!

என்னுள் சுருங்கி
அறையின் ஒரு மூலையில்
நான் முடங்கி கிடக்கையில்
வெளியே விசாலமாய்
தன் கைகளை விரித்து
அழைத்திடும் வானத்தினைக்
கண்டேன் ஜன்னலின் வழியே!

Friday 17 February 2012

இதயமா? வெறும் இயந்திரமா?

வாழ்வினைத் தொலைத்து விட்டு
வானம் நோக்கி பயணம் போகும்
இயந்திர வாழ்வினில்
நானும் ஓர் அங்கமா?
உலகம் என்ற பிரபஞ்சம்
தன்னுள் சுருங்கி
நான் என்ற ஒற்றைச் சொல்லில்
முடிந்து விடுகின்றது
இந்த கலியுக வாழ்க்கை.
ஒடிந்து விடும் நிலையில்
உறவுகள் மெலிந்து விடுகின்றன.
இதயம் வெறும் இயந்திரமான
வேளையில்
ஊதாரித்தனமாக உணர்வுகளை
செலவழிக்க பலர் விரும்புவதில்லை..
மனிதன் மரக்கட்டையான நொடியில்
வெண்ணிலவு வெறும் வேற்று கிரகமாயிற்று!
தவறாய் உரைத்து விட்டேனா?
மரக்கட்டைக்குக் கூட கொஞ்சம்
உணர்வு உண்டோ?

தொற்றிக் கொள்ளும் சில நினைவுகளும் உணர்வுகளும்..

என்றோ, எப்பொழுதோ,
ஏதோ ஓர் உணர்வில்
எழுதிய கவிதை
இன்று
கையில் கிடைத்தது
கசங்கிய நிலையில்!
செல்லரித்த புகைப்படங்களில்
வாழும் நினைவுகளைப் போலவே
கசங்கிக் கிடந்த காகிதத்தின் ஓரத்தில்
ஒட்டிக் கொண்டு இருந்தது
என் உணர்வுகளும்..

காதலின் சுவடுகள்.

உன்னுடன் இணைந்து நடக்கையில்
என் சுவடுகள் சொர்க்கத்தில்
பதிகின்றன.


உன்னுடன் கதைக்கையில்
என் கால நேரம் சுருங்கி
விடுகின்றது!


உன் சிரிப்பினில்
நான் மலர்கின்றேன்.
உன் கண்ணீரில்
நான் கரைகின்றேன்.


ஒரு கோடி பெண்களைப்
பார்த்தும் சலனம் இல்லாமல்
சுவாசிக்கின்றேன்!
புகைப்படம் என்றாலும்
உன் முகம் பார்க்கையில்
சேமித்து வைத்த என்னை
செலவழித்து விடுகிறேன்!


உன் நினைவுகளில் தொலைகின்றேன்.
உன் கனவுகளில் கொஞ்சம் கலைந்து போகின்றேன்.

காணா பொழுதுகளில் கவிஞன் ஆகின்றேன்.
காணும் நொடிகளில் ஓவியன் ஆகின்றேன்.
உன் பார்வைகளில் என்னை காண்கிறேன்.

பெண்ணே,
வாழ்ந்து விட்டு மடிகின்றேனே,
உன் உயிரில்
ஒரு துளியாய் சிந்தி
தேங்கி நின்று
அதன் ஈரம் உன்னை நனைத்துக் கொண்டே
இருக்கும் படி
உன்னுடன் ஒரு வாழ்க்கை
வாழ்ந்து விட்டு மடிகின்றேனே!


உன் மீதான என் காதல்!

உன் பார்வைகளில், உன் தொடுதல்களில்
உன் அணைப்பினில், உன் முத்தங்களில்
உன் கோபத்தினில், உன் முகச்சுளிப்பினில்
உன் தோள்களில், உன் வெறுப்பினில்
உன் அலட்சியத்தினில், உன் குறைகளில்
உன் நிறைகளில், உன் புன்னகையில்
இப்படி உன்னுடன்
எத்தனை வருடம் கழிந்தாலும்
தீரமலே இருக்கின்றது என் காதல்!
தினம் விடியும் விடியலைப் போன்று
புத்தம் புதிதாகவே மலர்கின்றது
உன் மீதான என் காதல்!

Wednesday 15 February 2012

கண்ணோடு சில கனவுகள்..


கண்ணோடு சில கனவுகள்..
கைக்கு எட்டா தூரம் என்றபோதும்
அனைவரின் மனதோடும்
நொடிக்கொரு முறை
எட்டிப் பார்க்கின்றன
சில கனவுகள்.
வானவில்லின் வர்ணங்களைப்
பார்த்து விட ஏங்கும்
கண்பார்வையற்றோரின் கண்ணோடு
விழித்திருக்கும் கனவுகள்.
தன் மழலையின் மொழியினை
சில நொடியேனும் கேட்டு விடத்
துடிக்கும் தாயின் செவிகளில்
சத்தமாக ஒலித்துக் கொண்டே
இருக்கும் கனவொன்று!
தான் காதலிக்கும் பெண்ணின் காதோடு
" I Love You"
சொல்லி விட மருகும்
வாய் பேச இயலாத
காதலனின் உதடுகளில்
உரைத்துக் கொண்டே இருக்கும்
காதல் கனவுகள் பல..
இப்படி நாம் அலட்சியப்படுத்தும்
நிஜங்கள் பல
சிலர் ஏங்கித் தவிக்கும்
வெறும் கானல் கனவுகள்.

Thursday 2 February 2012

சில உணர்வுகள்...

சில உணர்வுகள் உணரும் வரை
புரிந்து கொள்ள முடியாது.
சில உணர்வுகள் புரிந்த போதிலும்
உணர முடியாது.
தாய்மையும் காதலும் மட்டுமே
உணர்ந்த போதிலும்
புரிந்து கொள்ள முடியாது.

புரிதல் என்பது...

விரிசல்களுக்கு இடையில்
தேங்கி கிடக்கின்றது காதல் துளிகள்..
மேலோங்கி காதல் வழிந்திடும் நொடியில்
மறைந்தே போகும் இடைவெளிகள்..
புரிதல் என்பது சில வேளைகளில்
மேலோங்கி பெருகிடும் காதலே!

புரிதல் என்பது...

ஓராயிரம் வார்த்தைகள் கோர்த்து
பல நிமிடங்களைத் தொலைத்து
கூற வந்த வாக்கியங்கள்
ஊனமாகி பின் மறைந்து போகையில்
தேங்கி கிடந்த கண்ணீரில்
என்னை தேக்கி வைக்க
மெருதுவாய் என் கன்னம் வருடி
உன் விரல்களை என் விரல்களின் மேல்
வைத்து நீ பார்த்த
அந்த பார்வையில்
வழிந்தோடிய கண்ணீர்த்துளிகளில்
நானும் கொஞ்சம் சிந்தி நின்றேன்.
புரிதல் என்பது வார்த்தைகளில் இல்லை.
உணரும் உள்ளந்தனில் நிரம்பி கிடக்கு.

Wednesday 1 February 2012

வாழ்க்கை மிச்சம் இருக்கு..


வாழ்க்கை மிச்சம் இருக்கு..
வாழ்ந்து பார்க்க
வாழ்க்கை இன்னும்
கொஞ்சம் மிச்சம் இருக்கு!!!!

படுக்கை தனில் மல்லாந்து
படுத்து கொண்டு
மரணத்தை சுழலும் காற்றாடியின்
அருகில் வைத்து கொண்டு இருக்கும்
தாத்தாவுக்கு பேரக்குழந்தையின் பிஞ்சு
கரங்களில்
வாழ்க்கை இன்னும்
கொஞ்சம் மிச்சம் இருக்கு....

வறுமையின் பிடியில் சுரக்க மறுத்தாலும்
தன் மார்ப்போடு அணைத்து
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கையில்
ஓர் ஏழைத் தாய்க்கு
வாழ்ந்து பார்க்க
வாழ்க்கை இன்னும்
கொஞ்சம் மிச்சம் இருக்கு!!!!

கழுத்தை நெரித்திடும்
கடன் தொல்லையில்
வீட்டை விற்று விட்டு
வெளியேறும் பொழுதினில்
தன்னோடு வாலை ஆட்டிக் கொண்டு
தெருவோரம் நிற்கும்
நாய்க்குட்டியைப் பார்க்கையில்
கடனாளி ஒருவனுக்கு
வாழ்வதற்கு இன்னும்
வாழ்க்கை மிச்சம் இருக்கு!!!

எனக்கும் உனக்கும்
8 நாளில் மடிய போகும்
பட்டாம்பூச்சிக்கும்
வாழ்ந்து பார்க்க வாழ்க்கை
இன்னும் மிச்சம் இருக்கு....

பூமாதேவி ஏங்கிக் கிடக்கிறாள்!


பூமாதேவி ஏங்கிக் கிடக்கிறாள்
இவளின் பாதச்சுவடுகளுக்காய்.....

நடையிழந்த ஓவியம்
மூலையில் முடங்கிக் கிடக்காமல்..
மூச்சு முட்டி
கைகளில் நடைபயின்று...
துள்ளிக் குதித்தோடும்
காட்சிதனைப் பார்க்கையில்

பூமாதேவி ஏங்கிக் கிடக்கிறாள்
இவளின் பாதச்சுவடுகளுக்காய்.....

ஐம்புலன்களும் அம்சமாய் அமைந்து...
ஆறறிவும் அழகாய் நிறைந்து..
வாழ்க்கைப் போராட்டங்களில்
நம்பிக்கை இழந்த மானிடனுக்குச்
சிறகொடிந்த பட்டாம்பூச்சி ஒன்று
புன்னகை அணிந்து..
கைகளில் முட்களை ஒடித்து...
பாடம் கற்பிக்கும்
காட்சிதனைப் பார்க்கையில்

பூமாதேவி ஏங்கிக் கிடக்கிறாள்
இவளின் பாதச்சுவடுகளுக்காய்.....

கால்களின் மேல்
நம்பிக்கை வைக்காமல்...
வாழ்க்கையின் மேல்
விதியைத் திணிக்காமல்...
பெற்றோரின் மேல்
சுமையை ஏற்றாமல்...
இறைவனின் மேல்
பழியைச் சுமத்தாமல்...

வாழ்வின் தத்துவம் உணர்ந்து...
தன்னம்பிக்கயின் ஊன்றுகோல் பிடித்து...
புன்னகையை இதழோடு நிறைத்து...
தத்தித் தத்திச் செல்லும்
இந்த காட்சிதனைக் காண்கையில்
மானிடம் ஏங்கிக் கிடக்கிறது
இவளின் தன்னம்பிக்கையை வேண்டி...

சின்னஞ்சிறு நட்சத்திரமே...
எங்களின் பாதங்களை
உன் தன்னம்பிக்கைக்குத்
தானம் செய்கிறோம்...
இனி
என்றென்றும் தளராமல்
"எங்களின் கால்கள்"

வந்து விடவா விண்மீனே?

தூரமாய் அந்த சின்னஞ்சிறு நட்சத்திரம்
கண் சிமிட்டி கூப்பிடுது என்னை.
வந்து விடவா விண்மீனே?
நிலவொளியில் கண்ணாமூச்சி ஆடுவோம்
களைத்துப் போகையில் முகில்களை
அள்ளி எடுத்து முகம் துடைத்துக் கொள்வோம்.
உலகம் தன்னை மறந்து
விழி மூடி உன் மடியினில்
கொஞ்சம் துயில் கொள்ள
வந்து விடவா விண்மீனே?

கனவே உன்னோடு...

சின்ன சின்ன சிணுங்கல்கள்
அதனுள் வழிந்திடும் குறும்புகள்
சின்ன சின்ன மோதல்கள்
அதனுள் நிரம்பி கிடக்கும் காதல்..
சின்ன சின்ன பார்வைகள்
அதனுள் ஊடுருவிடும் மின்சாரங்கள்..

வாழ்வின் நிதர்சனத்தில்
திக்கித் திணறினாலும்
காதலின் கனவுகளில்
அவப்பொழுது என்னை நானே
மீட்டுக் கொள்கிறேன்.

Tuesday 31 January 2012

உன்னோடு எனக்கு ஒரு வாழ்வு வேண்டும்

உன் இதழோர புன்னகை போதும்.
உன் தோள் சாய்ந்து
ஓர் உறக்கம் வேண்டும்.
உன் விரல் சேர்த்து
மெது நடை போக வேண்டும்.
உன் பார்வைதனில்
கொஞ்சம் முகம் சிவக்க வேண்டும்.
என் கண்ணீர் மண்ணைத் தொடும் முன்னமே
உன் கை அதை தாங்கி பிடிக்க வேண்டும்.
என்றாவது ஒரு நாள்
எனக்கு மரணம் வேண்டும்.
அன்று உன் அணைப்பினில்
என் ஜனனம் முடிவுற வேண்டும்.

என் கோபத்திலும் கொஞ்சம் கவிதை கிடக்கு!!

சில பொழுதுகளில் வறண்டு போகும்
என் கவிதைகள்.
தேடி தேடி பார்த்து
வார்த்தைகள் கிட்டாமல்
மெளனத்தில் கூட
கவிதைகள் வடித்திருக்கிறேன்.
இருண்ட இதயம் துவண்டு கிடக்கையில்
எழுத மனமின்றி
வழிந்தோடிய கண்ணீரில்
ஓராயிரம் கவிதைகளை
கசிய விட்டிருக்கிறேன்.
இன்பம் சூழ்ந்து கொள்ளும்
கணங்களில்
புன்னகையினூடே பல கவிதைகளை
இறைத்திருக்கிறேன்.
கவிதை என்பது
வெறும் எழுத்தின் வடிவம் அல்ல.
உணர்வுகளின் உச்சம்.
என் கோபத்திலும்
கொஞ்சம் கவிதை கிடக்கு!!

Wednesday 18 January 2012

வெகு தூரத்தில் நீ!

நீதானா? இது நிஜம்தானா?
வியப்புக்குறியாகி நிற்கிறேன்!
சில நிஜங்கள் நம் கற்பனைகளுக்கு
அப்பாற்பட்டது!!
உயிரின் மரணம் நிச்சயம்
என்பது எனக்கு தெரியும்..
ஆனால்,
உயிரோடு இருக்கையில்
என் உணர்வுகள் மரிக்கின்றதே!!
இனி, என் ஆயுளின் ஆழம்
நீதான் என நான் நினைத்திருக்கையில்
அது வெறும் ஆயுள் தண்டனையாய்
மாறி என்னைப் பரிகசிக்கின்றதே!
நம் திருமண பந்தம்
தூய காதலில் இணைந்தது என்று
நான் களித்திருக்கையில்
தட்டி எழுப்பி
உச்சந்தலையில் ஓங்கி அடித்து
கூறி விட்டாய்
"காமம் கலைந்து விட்டதென்று"!
உன் மனதிற்குள் இன்று
வேறு ஒரு பெண்ணின்
சுவாசம் துடிப்பதாய்
என்னிடமே கூறுகின்றாய்.
அது சுவாசம் அல்ல
வெறும் காமப் பசி என்று
எனக்கு தெரியும்.
அந்த பெண்ணுக்கு?
திருமணமானவன் என்று தெரிந்தும்
உன் மேல் மையல் கொண்ட
அந்த பெண்ணுக்கு மட்டும்
காதலின் அர்த்தம் புரிந்து விடுமோ?
நிர்கதியாய் நிற்கிறேன்
ஆனால்,
தூய்மையானவளாய் உண்மையானவளாய்
நிற்கிறேன்.
தர்மமும் என் உண்மைக் காதலும்
என்னை காக்கும்.
நாளை உனக்கும் புரியும்
காமம் கடந்த பின் தாங்கி பிடிக்க
சத்தியம் காக்கும் மனையாள்
வேண்டும் என்று!
அன்று,
தூரத்தில் தெரியும் நிலவு
வெறும் எட்டாக் கனியாகி விடும்.

Tuesday 17 January 2012

கள்ளிபாலேனும் கிடைக்குமா?



வறண்டு கிடக்கு என் நாக்கு
என் தாயின் மார்பை போலவே!!

 உடம்பின் ஒவ்வொரு இயக்கமும்
மூளையின் செயல்பாட்டில் நிகழும்
என்பதால்தான் பசிக்க வில்லை
எனக்கு!!
ஏனெனில்
பசியை உணரும் அளவிற்கு
மூளைக்குத் தெம்பு இல்லை!!

ஊண் உண்டு வாழ வேண்டும்
என்ற நியதியைப் படைத்த
இறைவா
பின்பு என்னை ஏன் படைத்தாய்?

நீ தந்த வாழ்வு இங்கே,
எனக்கான உணவு எங்கே?

ஒரு துளி கிடைக்குமா?
கள்ளிப் பாலாய் இருந்தாலும்
ஒரு துளி கிடைக்குமா எனக்கு?

அன்புடன்,
கோகிலா கன்னியப்பன்.



புதைகுழிக்குள் என் கண்மணி
சுருண்டு கிடக்கிறாளே!!!

நோய் கண்டு மடிந்திருந்தால்
மார்தட்டி கதறி அழுதிருப்பேன்.
விபத்தொன்றில் முட்டி
இறந்திருந்தால்,
கால தேவனைச் சபித்து
சமாதானம் அடைந்திருப்பேன்.
பசியுண்டு மடிந்தாளே - மகளே
யாரைப் பழிச் சொல்லி
அழுவேன் நானே?

எட்டி நின்று உச்சுக் கொட்டும்
மனிதர் தம் மேன்மை கண்டு
கொந்தளிக்கவோ?
வயிறு முட்ட உண்ட பின்பும்
வாழ்வை வெல்லும் திராணி இல்லா
மனிதர் தம் வலிமைக் கண்டு
குமுறவோ?

என் செய்வேன் நான்?

புதைகுழிக்குள் என் கண்மணி
சுருண்டு கிடக்கிறாளே!!!

இறைவா,
தினம் நீ நீராடும் பாலில்
ஒரு துளி போதுமே
என் மகள் வாழ்ந்திருப்பாளே!!
பாலில் உன்னை நனைத்த
மனிதர்- என் பெண்ணைப்
புதைத்தனரே?

நீ என் செய்வாய்!!

உன் கரங்களை மனிதர்க்குக்
கொடுத்து விட்டு
கையலாகாதவன் ஆனாய்!!

உன் கால்களை மனிதர்க்குக்
கொடுத்து விட்டு முடமானாய்!!

இதழ்களைத் தந்து விட்டு
மெளனமானாய்!!

இறைவா,
இதயத்தினை மட்டும் உன் வசம்
வைத்துக் கொண்டதால்
நீ இறையானாய்!!
இதயமற்ற மனிதன் மத்தியில்
என்னைப் போல்
நீயும் இரையானாய்!!!

என் வறண்ட பூமி
வளம் பெறுமாயின்
வாய்க்கரிசி போடும்
வழக்கத்தைத் தடை விதிப்பேன்
அன்று.

வாயுள்ள மனிதனுக்குப் போய்
சேரட்டும் அவை
உயிரூட்டும் சோற்றுப் பருக்கைகளாய்!!!

 
அன்புடன்,
கோகிலா கன்னியப்பன்