Wednesday 1 August 2012

அந்த கைப்பிடிக்குள்...


அவருக்குக் கண்பார்வை இல்லை. வீடு திரும்பும் வேளைகளில் அவரை அடிக்கடி பார்ப்பேன். முடிந்த மட்டிலும் அவருக்கு உதவி செய்வேன். ஒரு நாள் பிரச்சனை ஒன்றின் இடுக்கினில் சிக்குண்டு எனது தன்னம்பிக்கையை இழந்து கொண்டிருந்த தருணத்தில் அவரைக் கண்டேன். கைப்பிடியுடன் தடுமாற்றமில்லாமல் அவர் தனது பாதைதனில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரிடம் ஓடிச் சென்று அவரின் கையைப் பிடித்து அவரை அழைத்துச் சென்றேன். அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். அவர் தான் தினமும் கோலாலம்பூரிலிருந்து ஷா அலாமிற்குப் பேருந்தில் பயணம் செய்து வேலைக்குப் போவதாகச் சொன்னார். அதிர்ச்சிக்குள்ளானேன்.

அவருடன் நான் செலவழித்தது வெறும் 6-7 நிமிடங்கள் மட்டுமே! அந்த நிமிடங்கள் எனக்கு அளித்த தைரியத்தை எந்த தன்முனைப்புச் சொற்ப்பொழிவாலும் தந்திருக்க முடியாது! பாதை கடக்க முயற்சிக்கையில் அருகில் உள்ளவரின் கையைப் பிடித்து கடக்கும் பொழுதினில் ஏற்படும் தைரியமும் தன்னம்பிக்கையும் ஏற்பட்டது எனக்கு அவரின் கைப்பிடியில்! யார் சொன்னது? விழிகளில் பார்வை உண்டென்று. அது மனதின் உறுதியில் இருக்கு. அன்று பாதையைக் கடக்க உதவியது நானல்ல. அவர்தான்!
 
மாற்றுத்திறனாளிகளைப் பார்த்துப் பரிதாபப்படும் அளவிற்கு நாம் முழுமையடைந்திருக்கவில்லை என்பது புரிந்தது எனக்கு!

No comments:

Post a Comment