Wednesday 1 August 2012

நாய்க்குட்டி போதும்!

புதைகுழியின் கடைசி அடிக்கு நாம் விழுந்து கொண்டிருக்கையில், உதவிக்கு நீட்டப்படும் கைகள் அனைத்தும் நம்மை மீட்டு விடுவதில்லை. ஏனோ ஒரு சிலரால் மட்டுமே நம்பிக்கை கொடுக்க முடிகின்றது காயம் பட்ட மனதிற்கு! எல்லோர் வாழ்விலும் அந்த தற்கொலை நிமிடங்கள் இருக்கத்தான் செய்கின்றது, குறைந்தபட்சம் மனதளவில்!! வாழ்ந்து விடுவது சிரமமில்லை; ஆனால், விழுந்ததும் எழுவதில்தான் கொஞ்சம் உறுதியும் மனோதிடமும் தேவைப்படுகின்றது!

கடந்து வந்த பாதையில் என்னுடன் நடந்து வந்த கதைமாந்தர்கள் நிறையவே இருக்கின்றனர். என்னுடன் பயணம் முடிந்து பாதை விலகி சென்றவர்கள் ஆயிரமாயிரம். சில தூர அடிகளில் தங்களின் சுவடுகளை அழுந்த பதித்தவர்களும் உண்டு! பல நூறு மையில் கடந்த போதும் நினைவை விட்டுத் தவறிப் போன காலடித்தடங்களும் உண்டு. மனிதர்கள் தவறிப்போன நினைவுத்தடங்களை வீட்டில் வாழ்ந்த செல்லப்பிராணிகள் நிரப்பி இருப்பது வியக்கத்தக்கது! தனது பசி தீர்த்த ஒரு ரொட்டித்துண்டிற்காக வாழ்நாள் முழுதும் நன்றி மறவா நாய்க்குட்டிகளுக்கு மத்தியில் தாழ்ந்து போன மனிதரும் உண்டு என் வாழ்வின் வரலாற்று பதிவுகளில்!! வரலாறு முக்கியம்தான். உலகின் வரலாறு அல்ல; தனித்திருக்கையில் நாம் திரும்பிப் பார்க்கும் நமது வரலாறு கற்றுக் கொடுக்கும் வாழ்வின் நிதர்சனத்தை!


இன்று நான் கற்றுக் கொண்ட நிதர்சனம்: துவண்டு கிடக்கும் மனதை மீட்க சில சமயங்களில் நமது காலடியைத் தொட்டவண்ணம் அமர்ந்திருக்கும் நாய்க்குட்டி போதும்!

No comments:

Post a Comment